தமாமில் கோலாகலமாக நடைபெற்ற ‘பழனிபாபா: தலைவனின் குரல்’ புத்தக அறிமுக விழா!

தமாமில் கோலாகலமாக நடைபெற்ற ‘பழனிபாபா: தலைவனின் குரல்’ புத்தக அறிமுக விழா!
சவுதி அரேபியாவின் தமாம் பகுதியில் கடந்த 05-02-2026 அன்று, ‘பழனிபாபா: தலைவனின் குரல்’ புத்தகத்தின் அறிமுக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
குவைத்தில் ஏற்கனவே மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், தற்போது தமாம் வாழ் தமிழ் மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த விழாவில் பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். குறிப்பாக:
- சவுதி செந்தமிழ் பாசறை
- மதராசி தமிழ் சங்கம்
- தமாம் தமிழ் சங்கம்
- தமிழ்நாடு ஓட்டுநர்கள் நல சங்கம்
- இந்திய தூதரகப் பள்ளி (International Indian School) பெற்றோர் ஆசிரியர் சங்கம்
மேலும், பல்வேறு தனியார் நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் NRT பொறுப்பாளர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

புத்தக வெளியீடு மற்றும் கௌரவிப்பு
இந்த வரலாற்று ஆவணமான புத்தகத்தை வழக்கறிஞரும் எழுத்தாளருமான சே.ஜெ.உமர்கயான் மற்றும் எழுத்தாளர் பழனிஷஹான் ஆகியோர் வெளியிட்டனர். விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, நமது ஊர் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த முகம்மது நூருல்லா அவர்களுக்கு, புத்தகங்களும் வாழ்த்து கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தலைவனின் உத்வேக வரிகள்
புத்தகத்தின் அறிமுக விழாவில், அதன் பின் அட்டையில் இடம்பெற்றுள்ள புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் இந்தத் தீர்க்கதரிசனமான வரிகள் அனைவரையும் நெகிழச் செய்தது:
“புனிதப்போராளி பத்திரிகை பொதுஅறிவுக் களஞ்சியம். வரலாற்று ஆதாரம். அதன் அனைத்து இதழ்களையும் சேகரித்து, பத்திரப்படுத்தி பைண்ட் செய்து வையுங்கள். ஒரு இதழின் ஒரு வரியைக்கூட அழியவிட்டுவிடாதே. என் அழிவுக்குமுன் என் அனுபவங்களை அள்ளித்தெளித்து வைக்கிறேன். நீ அதை அள்ளித் தொகுத்துவை; அடுத்த தலைமுறைக்கும் பயன்படும். என் எழுத்துக்களைப் பேச்சுகளை மட்டும், உன் வாரிசுகளுக்கு வைத்துவிட்டுப் போகவும். இலட்சியவாதிகளுக்கு அழிவுண்டு அல்லது அழிக்கப்படலாம்; ஆனால் இலட்சியங்களை எவராலும் அழிக்க முடியாது! அதன் இலட்சினைகளே இந்தப் பதிவுகள். எனவே, இதை வெறும் பத்திரிகை என்று பார்க்காதே!”
— புரட்சியாளர் பழனிபாபா
இந்த வரிகள், இந்தப் புத்தகம் வெறும் வாசிப்பிற்கானது மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கான ஒரு வரலாற்றுப் பாடம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. 150 ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த நூலை லாந்தர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
புலம்பெயர்ந்த மண்ணிலும் தமிழ் உணர்வோடும், எழுச்சிமிக்க சிந்தனைகளோடும் இந்த விழா வெற்றிகரமாக நிறைவு பெற்றது.





