அமெரிக்காவில் படித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து; நாடு கடத்தப்படும் அபாயம்.

வாஷிங்டன், ஏப்.19-
அமெரிக்காவில் படித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் விசா அல்லது சட்ட அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
வெளிநாட்டு மாணவர்கள்
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். இதற்காக ‘எப்-1’ போன்ற விசாக்களை பெற்று அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், நாட்டின் குடியேற்ற விதிகளை கடுமையாக்கி வருகிறார். மேலும் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு வெளிநாட்டு மாணவர்களும் தப்பவில்லை. பல்வேறு காரணங்களை கூறி அவர்களின் விசா அல்லது சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
1,024 மாணவர்கள் பாதிப்பு
அந்தவகையில் கடந்த மார்ச் இறுதியில் இருந்து தற்போது வரை 1,000-க்கு மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசா அல்லது சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதில் ஹார்வர்டு, ஸ்டான்போர்டு போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள் முதல் மேரிலாந்து பல்கலைக்கழகம், ஓகியோ பல்கலைக்கழகம் போன்ற அரசு பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்களும் அடங்குவர்.
மொத்தத்தில் 160 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக அமைப்புகளில் பயின்று வரும் 1,024 மாணவர்கள் இத்தகைய சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கைது செய்யப்படும் அபாயம்
பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த மாணவர்கள் மீது அமெரிக்க உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதேநேரம் எப்போதோ நடந்த போக்குவரத்து விதி மீறல் போன்ற அற்ப காரணங்களைக்காட்டி ஏராளமான மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அவர்கள் பயின்று வரும் கல்வி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
சில மாணவர்கள் தாங்கள் எதற்காக குறி வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மாணவர்களின் விசா அல்லது சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அவர்கள் ைகது செய்யப்பட்டு நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
கோர்ட்டுகளில் வழக்கு
எனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த மாணவர்களின் நாடு கடத்தலுக்கு அங்குள்ள கோர்ட்டுகள் தடை விதித்து இருந்தன. அதன் அடிப்படையில், விசா ரத்து செய்யப்பட்டுள்ள இந்த மாணவர்களின் சார்பிலும் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்துசெய்யப்பட்டு இருப்பது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.





