இராமநாதபுரம் விமான நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும்; கிராம மக்கள் மனு.

இராமநாதபுரம் விமான நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும்; கிராம மக்கள் மனு.
இராமநாதபுரம் விமான நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
விமான நிலையம்
ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தளமான இராமேசுவரத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் மதுரை மற்றும் திருச்சி மார்க்கமாக பேருந்து மற்றும் ரயில் மூலம் வருகின்றனர். இராமேசுவரத்துக்கு விமானம் மூலம் யாத்திரை, சுற்றுலா வருபவர்கள் விமானத்தில் மதுரை வரை வந்து, பின்னர் 170 கி.மீ தொலைவை 4 மணி நேரம் கார் அல்லது இதர வாகனங்களில் பயணம் செய்து வரவேண்டியுள்ளது.
இதனால் இராமநாதபுரம் பகுதியில் விமான நிலையம்அமைக்க வேண்டும் என்பது இராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வந்தது.
இந்நிலையில் அன்றைய (2019-2024) மாநிலங்களவை திமுக உறுப்பினர் வில்சன் கேட்ட கேள்விக்கு முன்னாள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எழுத்துப்பூர்வமாக அளித்த விவரம் வருமாறு,
உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இராமநாதபுரம், தஞ்சை, வேலூர், நெய்வேலி ஆகிய நான்கு இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் இராமநாதபுரம் விமான நிலையத்துக்கு ரூ.36.72 கோடியும், தஞ்சை விமான நிலையம் அமைக்க ரூ.50.59 கோடியும், வேலூர் விமான நிலையத்துக்கு ரூ.44 கோடியும், நெய்வேலி விமான நிலையத்திற்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார்.
சுற்றுலா தலங்கள் நிறைந்த இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 இடங்களை தேர்வு செய்து ஏறத்தாழ 700 ஏக்கர் அளவிலான நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை சேர்ந்தவர்களுக்கு தற்போது தங்கள் பகுதியை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் பரவி வருகிறது.
இதை தொடர்ந்து தங்கள் விவசாய நிலங்களையும், வீடுகளையும் காப்பாற்றி கொள்ளும் வகையில் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
அதன்படி இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கும்பரம், பெருங்குளம் ஊராட்சி தெற்குவாணிவீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது:- தங்கள் பகுதியில் விமான நிலையம் அமைக்கக்கூடாது. ஏனெனில், இங்குள்ள விவசாய நிலங்களை நம்பி வாழ்வாதாரம் பெற்று வருகிறோம். இந்த நிலங்களை நம்பித்தான் நாங்கள் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். நிலங்களை கையகப்படுத்தினால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
எனவே எங்களின் வாழ்வாதாரம் கருதி எங்கள் பகுதியில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும் முடிவை கைவிட்டு மாற்று இடம் தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.





