பெற்றோர்- மாணவர்களுக்கு குழப்பம் வேண்டாம்: தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
சென்னை, டிச.24-
பெற்றோர்- மாணவர்களுக்கு குழப்பம் வேண்டாம்: தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.
சட்ட திருத்தம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அனைத்து பள்ளி குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளை திருத்தம் செய்து, 5 மற்றும் 8-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு, 2 மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழக பள்ளிகளுக்கு பொருந்தாது
தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசு பள்ளிகளுக்கு, இந்த புதிய நடைமுறை பொருந்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடையின்றி 8-ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.
தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல், மாநிலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, தமிழக அரசு தொடங்கிய பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழகத்தில் செயல்பட்டுவரும் மத்திய அரசு பள்ளிகளை தவிர பிற பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
குழப்பம் வேண்டாம்
எனவே, தமிழகத்தில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்த வகையிலும் குழப்பமடைய தேவையில்லை.
தமிழகத்தை பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதை போல, ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்விஅறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். கல்விதான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம்.
எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் திராவிட மாடல் அரசின் இலக்கு. இந்த இலக்கை எய்தி, இந்தியத் துணைக் கண்டத்திற்கே, தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக தொடர்ந்து விளங்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, தி.மு.க. அரசு முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
One Comment