ஆதிப்பட்டினத்தில் கடலில் மீனவர் வலையில் சிக்கிய உடல்: கொலையான வாலிபரை அடையாளம் காண 2 தனிப்படைகள் அமைப்பு; போலீசார் தீவிர விசாரணை
புதுக்கோட்டை, ஜன.19-

ஆதிப்பட்டினத்தில் கடலில் மீனவர் வலையில் சிக்கிய உடல்: கொலையான வாலிபரை அடையாளம் காண 2 தனிப்படைகள் அமைப்பு; போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலையில் சிக்கிய வாலிபர் உடல்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆதிப்பட்டினத்தில் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க விரித்த வலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி சிக்கியது.
அந்த வாலிபரின் உடலில் கைகள், கால்கள், இடுப்பு பகுதியில் கயிறு வைத்து, கல் கட்டப்பட்டு இருந்தது. அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் பரிசோதனை நடைபெற்றது.
இந்த வழக்கு கடலோர பாதுகாப்பு குழுமத்தில் இருந்து மணமேல்குடி சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
தனிப்படை
இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் அவரது கழுத்து நெரிக்கப்பட்டும், மார்பு பகுதியில் காலால் மிதிக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்தது தெரியவந்தது.
அவரை திட்டமிட்டு கொலை செய்து கல்லை கட்டி கடலில் இறக்கியிருக்கலாம் அல்லது வாலிபரின் உடலில் கல்லை கட்டி கடலில் இறக்கி கொலை செய்திருக்கலாம் என கருதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் வாலிபரின் உடல் மீட்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அவரை அடையாளம் காணவும், அவரை கொலை செய்த நபர்களை பிடிக்கவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு குறித்து போலீசார் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட வாலிபரை அடையாளம் கண்ட பின்பு தான், அவர் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டவர் என்பது பின்னர் கண்டுபிடிக்க முடியும். அதனால் கொலையான வாலிபரை அடையாளம் காண 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
செல்போன் எண்கள்
மணமேல்குடி அருகே, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்பட கடற்கரையோர பகுதிகளில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்கத்து மாவட்டங்களிலும் தகவல் தெரிவித்து விசாரணை நடைபெறுகிறது.
வாலிபர் உடல் மீட்கப்பட்ட பகுதியின் அருகே செல்போன் டவர் சிக்னலில் பதிவான செல்போன் எண்களை வைத்து விசாரிக்கப்படுகிறது. வாலிபரின் கையில் ‘விஜய்’ என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. மேலும் ‘ம்’ என்ற பெயரில் முடியும் ஒரு பெயரும் பச்சை குத்தப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பெயர் முழுமையாக தெரியவில்லை. இதேபோல் 27.5.2011 என்ற தேதியும் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அடையாளத்துடன் காணாமல் போனவர்கள் பற்றி வழக்கு எதுவும் பிற போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என விசாரிக்கப்படுகிறது.
கடலோர பகுதியை சேர்ந்தவர்கள்
வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடலோர பகுதியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
வாலிபரின் உடலில் கல்லை கட்டி கடலில் இறக்க குறைந்தது 2 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம். அதனால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியவந்ததுடன், அதன்பின் புலன்விசாரணையில் மேலும் தகவல்கள் கிடைக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.