புதுக்கோட்டையில் சமையல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை, ஏப்.17-
புதுக்கோட்டையில் சமையல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
சத்துணவு உதவியாளர்கள் பணியிடம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகநலன், மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 345 சமையல் உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் சமையல் உதவியாளர்கள் தொடர்ந்து 12 மாத காலம் பணியினை முடித்த பின், சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். சமையல் உதவியாளர் பதவி ஊதியம் விவரம் தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஆகும்.
12 மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.9 ஆயிரம் என்ற ஊதிய விகிதம் ஆகும்.
தகுதிகள்
இப்பணியிடங்களுக்கு இளம் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. தமிழ் சரளமாக எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது, இதர தகுதிகளின் நிர்ணயம் எந்த தேதியில் அறிவிப்பு வெளியிடப்படுகிறதோ அந்த தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும்.
பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டோர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ.க்குள் இருக்க வேண்டும்.
பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவை விணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 28-ந் தேதி ஆகும்.
25 சதவீத இட ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் 4 சதவித இடஒதுக்கீட்டில் கீழ்கண்ட குறைபாடுகள் உள்ளவர்கள் மட்டும் (உரிய அடையாள அட்டையுடன்) விண்ணப்பிக்க வேண்டும். குறைவான பார்வை திறன் (மூக்கு கண்ணாடி மூலம் பார்வை சரி செய்யப்பட்டது). உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்). குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40 சதவீத கைகளில் முழு செயல்பாட்டு திறன், உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது). திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்.
குறிப்பிட்ட கற்றல் திறன் குறையாடு (மிதமான). விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவித இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை காலிப்பணியிட பள்ளி சத்துணவு மையம் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியங்கள், புதுக்கோட்டை மாநகராட்சியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
அஞ்சல் துறையின் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்படும்போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ மற்றும் தபால் மூலமாகவோ வரப்பெறும் விண்ணப்பங்கள் நேர்காணலுக்கு பரிசீலனை செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





