தாயை பராமரிக்காததால் மகன்களுக்கு எழுதிக் கொடுத்த தான பத்திரம் ரத்து.

தாயை பராமரிக்காததால் மகன்களுக்கு எழுதிக் கொடுத்த தான பத்திரம் ரத்து.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கலைமணி விவசாயி. இவரது மனைவி லோக மணி (வயது 65). கடந்த 2021-ம் ஆண்டு கலைமணி, தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை தனது மகன்களுக்கு தான செட்டில்மெண்ட் செய்து சின்னமனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.
இந்த நிலையில் கலைமணி இறந்துவிட்டார். இதையடுத்து லோக மணியை, இவரது மகன்கள் யாரும் பராமரிக்க முன்வரவில்லையாம்.
இது குறித்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகமதுவிடம், லோகமணி புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தனது மகன்கள் தன்னை பராமரிப்பது இல்லை. இதனால் தனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ஆர்.டி.ஓ.
அலுவலகத்தில் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது 3 மகன்களில் ஒருவர் மட்டும் தனது தாயை பராமரிப்பதாக கூறினார். மற்றவர்கள் தம்மால் முடியாது என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். பின்னர் இதற்கான உத்தரவு நகலை லோகமணியிடம் வழங்கினார்.





