வெளிநாட்டில் முதுகலை படிப்பு படிக்க சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் முதுகலை படிப்பு படிக்க சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி கடைசி நாளாகும்.
கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு அரசு 2025-26-ம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் 2025-26-ம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
இணையதள முகவரி
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பில் 60 அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல், மேலாண்மை, அறிவியல் பயன்பாட்டு அறிவியல் வேளாண்மை அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூகஅறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப்பட்டப் படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes- minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசி நாள்
மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதிக்குள் `ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005‘ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவிகள் வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





