தமிழக அமைச்சரவை மாற்றம்; அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும், பொன்முடியும் பதவி விலக முன் வந்து தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011 – 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை
இது தொடர்பாக செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அவரை கைது செய்தது. அப்போதும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த நிலையில் ஜாமீன் வாங்குவதற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
ஜாமீன் மனு
அதாவது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அவர் அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என வாதிடப்பட்டது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சுமார் 471 நாட்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது.
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி
கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி புழல் சிறையில் இருந்து விடுதலையானார். வெளியே வந்ததும் அடுத்த நாளே அவருக்கு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரவையில் இணைந்தார். இது பெரும் எதிர்ப்புகளை சந்தித்தது.
கோர்ட் கண்டனம்
செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்று கூறித்தானே ஜாமீன் பெற்றார். எனவே ஜாமீன் மனுவை ரத்துச் செய்யக் கோரி அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இரு நாட்களில் மீண்டும் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. எனவே அவருக்கு ஜாமீன் வேண்டுமா இல்லை அமைச்சர் பதவி வேண்டுமா என கோர்ட் கேள்வி எழுப்பியது.
ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அமைச்சராக தொடர்ந்தால் ஜாமீன் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அப்படி ஜாமீன் ரத்தானால் அமலாக்கத் துறை கைது செய்யலாம். இதை தவிர்ப்பதற்காக முதல்வரிடம் செந்தில் பாலாஜி ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பொன்முடி ராஜினாமா
அது போல் விலை மாதர், சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடியும் ஆபாசமாக பேசியிருந்த நிலையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , பொன்முடியை கடுமையாக கண்டித்தார்.
அது போல் பொன்முடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் இந்து அமைப்புகளும் போர்க் கொடி உயர்த்தின. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அரசுக்கு தேவையற்ற அவப்பெயர் என திமுக தலைமை கருதுகிறது.
பொன்முடி ராஜினாமா ஏன்
எனவே பொன்முடியை ராஜினாமா செய்யுமாறு திமுக தலைமை அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதை ஏற்று பொன்முடியும் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். இந்த நிலையில் துணைவேந்தர்கள் மாநாட்டுக்காக ஊட்டி சென்ற ஆளுநர் ரவி, இன்று சென்னை திரும்புகிறார்.
ஆளுநருக்கு இன்று கடிதம்
அப்போது இரு அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களையும் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முத்தாய்ப்பாக நேற்றைய தினம் பயோ மருத்துவ கழிவுகள் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





