புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவு அரைக்கும் எந்திரங்கள் வாங்க பெண்களுக்கு மானியம் கலெக்டர் அருணா தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவு அரைக்கும் எந்திரங்கள் வாங்க பெண்களுக்கு மானியம் அளிக்கப்படுவதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
மாவு அரைக்கும் எந்திரம்
சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025-2026-ம் நிதியாண்டிற்காக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக நீதியிலான எந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சான்றிதழ்கள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள், தமிழ்நாட்டின் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறப்பிட, பிறந்த தேதிக்கான சான்றுகள் தேவை. திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் இல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வருமானச் சான்று தாசில்தாரிடம் இருந்து பெறுதல் வேண்டும். எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜுலை) 14-ந் தேதிக்குள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சமூக நல அலுவலகம்
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





