டிஜிட்டல் கைது மோசடி: புதுக்கோட்டை தொழில் அதிபர்களிடம் செல்போனில் பேசி மிரட்டிய கும்பல்; பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள்

புதுக்கோட்டை, ஜன.19-
டிஜிட்டல் கைது மோசடி: புதுக்கோட்டை தொழில் அதிபர்களிடம் செல்போனில் பேசி மிரட்டிய கும்பல்; பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள்
டிஜிட்டல் கைது மோசடி
சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைனில் பண மோசடி சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது. இதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்றம், போதைப்பொருள் பார்சல் கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருப்பதாக அல்லது அதில் தொடர்பு இருப்பதாக ஒருவரிடம் கூறி, அவரை கைது செய்யப்படுவதாகவும், இருக்கும் இடத்தை விட்டு எங்கும் வெளியில் செல்லக்கூடாது என மர்ம ஆசாமிகள் போலீசார், அதிகாரிகள் போல் பேசியும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டும் சம்பவமும் அதிகரித்துள்ளது. இதில் பலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர்.
இந்த டிஜிட்டல் கைது மோசடியில் பிரபலங்கள், பணப்பரிமாற்றம் அதிகம் மேற்கொள்வர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து மர்ம கும்பல் ஈடுபட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்று செல்போனிலும், வீடியோ அழைப்பில் பேசியும் பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் படியும், பணத்தை ஆன்லைனில் அனுப்பியோ, வங்கியில் செலுத்தியோ ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
தொழில் அதிபர்கள்
இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த பிரபல ஜவுளிக்கடை தொழில் அதிபர் ஒருவரிடமும், மற்றொரு தொழில் அதிபரிடமும், பிரபல டாக்டர் ஒருவரிடம் சமீபத்தில் மர்ம ஆசாமிகள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி அவர்களை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக புகார் வந்ததின் அடிப்படையில் டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும், அந்த இடத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது எனவும் பேசி மிரட்டியிருக்கின்றனர்.
இதில் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்த போது அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக ஒவ்வொருவரும் சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த அழைப்பை துண்டித்து விட்டு, அறையை விட்டு வெளியே வரும்படி அறிவுறுத்தியதின் அடிப்படையில் அவ்வாறு செய்திருக்கின்றனர்.
அந்த கும்பல் தொழில் அதிபர்களிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் அனுப்பி வைக்கும் படி மிரட்டும் சம்பவம் நடந்திருக்கும். ஆனால் தொழில் அதிபர்கள் விழிப்புணர்வு காரணமாக டிஜிட்டல் கைது மோசடியில் சிக்காமல் தப்பினர்.
விழிப்புணர்வு
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘‘டிஜிட்டல் கைது மோசடியில் பணம் பறிக்கும் கும்பல் போலீஸ் அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் போன்று பேசி, அந்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க குறிப்பிட்ட தொகையை கேட்டு மிரட்டி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இது போன்ற அழைப்புகள் வந்தால், அதனை துண்டித்துவிடவும். மேலும் அவர்களிடம் எந்தவித விவரங்களை பகிர வேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், உஷாராகவும் இருக்கவும். ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்றனர்.