தாசில்தார் அலுவலகங்களில் ரேஷன் கடைகள் தொடர்பான குறைதீர் முகாம் இன்று நடக்கிறது

புதுக்கோட்டை, ஜன.25-
தாசில்தார் அலுவலகங்களில் ரேஷன் கடைகள் தொடர்பான குறைதீர் முகாம் இன்று நடக்கிறது
பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும், ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைகள், ரேஷன் கடைகள் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று 25.01.25 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் தொடர்புடைய தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
மேற்படி முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளுக்கு கோரிக்கையினை அளிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தும் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.