வடகிழக்கு பருவமழை கால சேதங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்; கண்காணிப்பு அதிகாரி தகவல்.

வடகிழக்கு பருவமழை கால சேதங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்; கண்காணிப்பு அதிகாரி தகவல்.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனருமான அஜய் யாதவ் தலைமை தாங்கினார்.
மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அஜய் யாதவ் தெரிவித்ததாவது:-
வடகிழக்கு பருவ மழையின்போது பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை
பேரிடர் காலங்களில், கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையின் 04322-222207 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாப்பாக வைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாயுமானவர் திட்டம்
அதன்பின்னர், முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் குறித்து மேட்டுப்பட்டியில் பயனாளிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





