மணமேல்குடி ஒன்றியத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை ஜன.25-
மணமேல்குடி ஒன்றியத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி வட்டார வள மையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சசிகலா அவர்கள் தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி வட்டார வளமையம் மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார்.
இப்பயிற்சியில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் புரிந்து கொள்ளுதல், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டங்கள் குறித்த ஒரு பார்வை, குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் – வெளிப்படுத்தலை கையாளுதல், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கையாளுபவர்களுக்கு,விழிப்புணர்வுகளை கொடுத்தல் போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் இருந்து வசந்தகுமார் அவர்கள் சமுதாயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்குடன் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் கருத்தாளர்களாக ஜேசுதாசன், விஜயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர் பன்னீர்செல்வன் ஆகியோர் செயல்பட்டனர்.