8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேர்வுக்கான இலவச பயிற்சி

8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி ஆவூர் ஊர்ப்புற நூலகத்தில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
கல்வி உதவித்தொகைக்கான தேர்வு
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.ஆயிரம் மத்திய அரசால், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் ஜனவரி மாதம் 10-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகள்
தேர்வுக்கான விண்ணப்ப படிவம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை ரூ.50 கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இத்தேர்வுக்கான ஆயத்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆவூரில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில் வருகிற 27-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வரவேண்டும். மேலும் 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட நூல்களையும் மற்றும் குறிப்பேடுகள் கொண்டு வர வேண்டும். இப்பயிற்சிக்கு பின்பு வாட்ஸ்அப் மூலம் குழுக்கள் உருவாக்கப்பட்டு தேர்வு முடியும் வரை இணைய வழியில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படும். காஞ்சீபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் சிவகுமார் பயிற்சி அளிக்க உள்ளார்.
பயிற்சியில் கலந்து கொள்ள உள்ள மாணவர்கள் ஆவூர் நூலகரை தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலகர் அறிவுரையின் பேரில் ஆவூர் ஊர்ப்புற நூலகர் நாகலட்சுமி செய்துள்ளார்.
இந்த பயிற்சியானது புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஆவூர் நூலகத்தில் தான் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





