பெற்றோர்கள் விவாகரத்து பெற்று இருந்தாலும் மகளின் திருமணச் செலவுக்கு தந்தை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

பெற்றோர்கள் விவாகரத்து பெற்று இருந்தாலும் மகளின் திருமணச் செலவுக்கு தந்தை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
டெல்லியைச் சேர்ந்த ஒரு ஜோடி கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 1997-ம் ஆண்டு ஒரு மகளும், 1999-ம் ஆண்டு ஒரு மகனும் பிறந்தனர்.

ஆனால், கணவர் 2009-ம் ஆண்டில் மனைவியால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்று கூறி விவாகரத்துக்கான மனுவை தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் மனைவியும், கணவர் மீது வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக நடந்து, இறுதியாக கடந்த 2019-ம் ஆண்டு குடும்ப நீதிமன்றம் இந்த தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
முதன்மை பொறுப்பு
இதற்கிடையில், தனது மகளின் திருமணச் செலவுக்காக தந்தை நிதி உதவி செய்ய வேண்டும் என மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.
ஆனால் தந்தை, தனக்கு எந்த வருமானமும் இல்லை. அதோடு விவாகரத்து ஆகி விட்டதால் நான் ஏன் நிதி தர வேண்டும் என்று வாதிட்டார்.
ஆனால், தந்தைக்கு மீன் வளர்ப்பு மற்றும் இதர வருமானங்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது என்று அந்த பெண் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி விக்ரம் நாத் தீர்ப்பளித்தார். அவர், “ஒரு தந்தையின் முதன்மை பொறுப்பு குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாகும். அதில் மகளின் திருமணச் செலவுகளும் அடங்கும்.
தந்தை-தாய் இடையே விவாகரத்து நடந்திருந்தாலும், குழந்தைகளுக்கான கடமையில் இருந்து தந்தை விலக முடியாது. எனவே, மகளின் திருமணத்திற்காக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
அதோடு, இந்த தொகையை அடுத்த மாதம் 15-ந் தேதி வழங்க வேண்டும் என்றும், தவறினால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
தம்பதிகள் விவாகரத்து பெற்று இருந்தாலும், மகளின் திருமணத்தில் தந்தை நிதி உதவி செய்வது பெற்றோரின் இயல்பான கடமை என சுப்ரீம் கோர்ட்டு கூறி உறுதிப்படுத்தியுள்ளது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக கருதப்படுகிறது.





