ராஜஸ்தான் மாநிலத்தில் பெயர் குழப்பத்தில் நோயாளிக்கு பதிலாக மற்றொரு நோயாளியின் தந்தைக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துவிட்டனர்.

கோடா, ஏப்.19-
ராஜஸ்தான் மாநிலத்தில் பெயர் குழப்பத்தில், நோயாளிக்கு பதிலாக, மற்றொரு நோயாளியின் தந்தைக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெயர் குழப்பத்தால் வினோதம்
ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் கோடா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதிகள் கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்திருந்தார் ஜக்தீஷ் என்ற வாலிபர். அவருக்கு டயாலிசிஸ் பிஸ்துலா அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது.
அதே ஆஸ்பத்திரியில் விபத்தில் சிக்கிய தனது மகனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக மற்றொரு ஜக்தீஷ் வந்திருந்தார்.
சம்பவத்தன்று இளம்வயது ஜக்தீஷ் அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டர் வார்டுக்கு வெளியே இருந்த சமயத்தில், தன் மகனின் அறுவை சிகிச்சைக்காக வந்திருந்த முதியவர் ஜக்தீசும் அங்கே காத்திருந்தார்.
ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்கள் நோயாளியின் பெயரை சொல்லி அழைத்தபோது, பேச முடியாத நிலையில் அயர்வாக இருந்த வாலிபர் ஜக்தீஷ் அமைதியாக இருந்தபோது, மகனின் ஆபரேசனுக்கு உதவிக்காக வந்திருந்த முதியவர் ஜக்தீஷ் கையை உயர்த்தி உள்ளார்.
உடனே அவரை நோயாளி என தவறாக புரிந்து கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை ஏற்பாடுகளை செய்தனர்.
விசாரணைக்கு உத்தரவு
மேஜையில் கிடத்தப்பட்ட ஜக்தீஷ் கையில் பிளேடால் கீறி சிகிச்சையை ஆரம்பித்தனர். அதிர்ஷ்டவசமாக, ஜக்தீசின் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர், ஆபரேஷன் மேஜையில் இருந்தவர் நோயாளி அல்ல, ஒரு உதவியாளர் என்பதை அடையாளம் கண்டுகொண்டதால் உடனடியாக சிகிச்சையை நிறுத்தினார்.
முதியவர் ஜக்தீசுக்கு தையல்போடப்பட்டு, மகன் சிகிச்சை பெற்ற இடத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவரது மகனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி வெற்றிகரமாக நடந்தது.
அதேபோல டயாலிசிஸ் பிஸ்துலா சிகிச்சைக்கு வந்த வாலிபர் ஜக்தீசுக்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் அறுவை சிகிச்சையில் நடந்த குழப்பம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தவறு குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தவறுக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.





