அறந்தாங்கி புதிய பஸ் நிலைய அரசாணை ரத்து : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அறந்தாங்கி புதிய பஸ் நிலைய அரசாணை ரத்து : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அறந்தாங்கியில் குத்தகை நிலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காகத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:
அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் ‘சுலோச்சனாம்பாள் புரம் சத்திரம் அறக்கட்டளை’க்குச் சொந்தமான 8.38 ஏக்கர் நிலம் உள்ளது.
இங்குப் பல ஆண்டுகளாக வாரச்சந்தை இயங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் இதை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலத்தில் 3.50 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்க, தமிழக அரசு 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசாணை வெளியிட்டது.
மனுதாரரின் வாதங்கள்:
புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம் தற்போதைய பழைய பஸ் நிலையத்திலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவிலேயே உள்ளது.
இதனால் நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் வாதிட்டார்.
மேலும், அருகிலேயே அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால், பஸ் நிலையத்தை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு:
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பின்வருமாறு குறிப்பிட்டனர்:
“புதிய பஸ் நிலையம் கட்டுவது தொடர்பான நடவடிக்கைகளில் டெண்டர் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரிகிறது.
ஒரு அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து பஸ் நிலையம் அமைப்பதாக அரசு பிறப்பித்த அரசாணை ஏற்புடையதல்ல என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.





