எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேர் கைது; இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.

கோட்டைப்பட்டினம், ஜூலை.12-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

விசைப்படகில்…

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் நாள்தோறும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 41) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், அதே பகுதியை சேர்ந்த விஜய பிரியன் (21), விஜய பிரகாஷ் (18), காசிராஜா (68), சேகர் (60) ஆகிய 5 பேரும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் (35), ரஹ்மத்துல்லா (38), திருமுருகன் (27) ஆகிய 4 பேரும், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த கலந்தர் நைனா முகமது (35) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (42), மணிகண்டன் (25), கார்த்திக் (23), ஜெயக்குமார் (53) ஆகிய 4 பேரும் என மொத்தம் 3 விசைப்படகுகளில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

13 மீனவர்கள் கைது

இவர்கள் 13 பேரும் 25 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 13 மீனவர்களையும், ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

கொந்தளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவ சங்க நிர்வாகிகள் கூறும்போது, இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதுமாக இருந்து வருகிறது. இதனை மத்திய-மாநில அரசுகள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மீனவர்களின் படகுகளை எவ்வித நிபந்தனையும் இன்றி மீனவர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button