மணமேல்குடி அருகே நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்.

மணமேல்குடி அருகே நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்.
ஊராட்சி பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 110 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 8-ம் வகுப்பு முடிப்பவர்கள் மேல் படிப்பு படிக்க சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணமேல்குடிக்கு செல்ல வேண்டியுள்ளது.
எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையில் அதிக தூரம் சென்று படிப்பதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மாணவர்கள் படிப்பை இடையில் விடும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது.

இதனை தடுக்கும் விதமாக கடந்த 2012-ம் ஆண்டு வெள்ளூர் பள்ளியை அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட கிராமமக்கள் சார்பாக அரசுக்கு ரூ.1 லட்சம் பங்களிப்பு தொகையும், பள்ளி கட்டிடங்கள் கட்ட 3.5 ஏக்கர் இடமும் வழங்கினர்.
சுமார் 13 ஆண்டுகள் ஆகியும் வெள்ளூர் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படாமல் ஏழை குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் கேட்டு பதாகை
நடப்பு கல்வி ஆண்டில் வெள்ளூர் பள்ளி தரம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது.
ஆகவே வெள்ளூர் பள்ளியை தரம் உயர்த்தாததை கண்டித்தும், இப்பள்ளிக்கு நிரந்தர தலைமை ஆசிரியர் நியமிக்காததை கண்டித்தும், பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராமமக்கள் ஒருங்கிணைந்து கடந்த 15-ந்தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக மனு அனுப்பி இருந்தனர்.
மேலும் பள்ளி வாசல் மற்றும் மணமேல்குடி சாலையில் பதாகை வைத்தும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்
இந்நிலையில் நேற்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் செழியன், மணமேல்குடி தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வெள்ளூருக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், கிராமமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளியை தரம் உயர்த்த போதுமான மாணவர்கள் இல்லை என்றும், வரும் கல்வியாண்டில் மாணவர்கள் அதிகரித்தால் தரம் உயர்த்தலாம் என்றும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த கிராமமக்கள், முன்னாள் மாணவர்கள் உடனடியாக பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
பள்ளியை தரம் உயர்த்தும் வரை பள்ளி புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று கூறி கலைந்து சென்றனர்.





