டிஜிட்டல் கைது என மிரட்டல்: 70 மணி நேர சித்ரவதையால் பெண் மருத்துவர் மரணம் : ரூ.6½ லட்சம் பறித்த கும்பலுக்கு வலைவீச்சு.

டிஜிட்டல் கைது’ என மிரட்டல்: 70 மணி நேர சித்ரவதையால் பெண் மருத்துவர் மரணம்; ரூ.6½ லட்சம் பறித்த கும்பலுக்கு வலைவீச்சு.
‘டிஜிட்டல் கைது’ செய்யப்பட்டதாக கூறி பெண் டாக்டரை மிரட்டிய கும்பல் அவரிடம் இருந்து ரூ.6½ லட்சத்தை பறித்தது. 70 மணி நேர சித்ரவதையால் மாரடைப்பு ஏற்பட்டு அந்த டாக்டர் பரிதாபமாக இறந்தார்.
டிஜிட்டல் கைது
அறிவியல் வளர்ச்சியால் இன்று பணப்பரிவர்த்தனை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் ‘டிஜிட்டல்‘ மயமாகி வருகிறது. அதுபோல் குற்றவாளிகளும் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக செல்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களை குறிவைத்து இந்த சைபர் கொள்ளையர்கள், பணம் பறிக்கும் குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள். அதுவும் வாட்ஸ் அப் அழைப்பில் ஒருவரை தொடர்பு கொள்ளும் இந்த கும்பல் போலீஸ் உடையில் தோன்றி, சம்பந்தப்பட்ட நபரை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதாக கூறி, அவர்களை மிரட்டுவார்கள். அவர்கள் கேட்கும் பணம் கிடைக்கும்வரை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பை துண்டிக்கவிடமாட்டார்கள்.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அப்படி ஒரு சிக்கலில் மாட்டிய ஒருவர், தனது உயிரையே இழந்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
பெண் டாக்டர்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர், 76 வயது பெண் டாக்டர். இவர் அந்த பகுதியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் உறைவிட டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 5-ந்தேதி அவரது செல்போனுக்கு முன்பின் தெரியாத ஒரு எண்ணில் இருந்து வாட்ஸ் அப் வீடிேயா அழைப்பு ஒன்று வந்தது. அதை பெண் டாக்டர் எடுத்து பேசினார். எதிர்முனையில் தோன்றிய அந்த நபர் பெங்களூரு நகர போலீசார் உடையில் இருந்தார்.
ரூ.6½ லட்சம் பறிப்பு
போலீஸ் உடையில் தோன்றிய அவர், சுப்ரீம் கோர்ட்டு, அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் முத்திரையிட்ட ஆவணங்களை காட்டி, நீங்கள் ஒருவரை கடத்தியதாக புகார் வந்துள்ளது. அதன்பேரில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்துள்ளோம் என்றார்.
இதைக்கேட்டு பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பேசிய அந்த நபர், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் இந்த சிக்கலில் இருந்து நீங்கள் விடுபடலாம் என்றார்.
மறுநாள் மீண்டும் அவருக்கு அழைப்பு வந்தது. எனவே அவர் தனது ஓய்வூதிய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்தை, அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றினார். அந்த வங்கிக் கணக்கு மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக காட்டியது.
மாரடைப்பால் சாவு
அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது என்று நினைத்து இருந்த அவருக்கு, மீண்டும் வாட்ஸ் அப் வீடியோ கால் வந்தது. அப்போதும் டாக்டர் மிரட்டப்பட்டுள்ளார்.
சுமார் 70 மணி நேர சித்ரவதையால் பெண் டாக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
அவர் இறந்த பின்னும் அவரது செல்போனுக்கு வீடியோ அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து கொண்டே இருந்தது. கடைசியாக கடந்த 10-ந்தேதி காலையில் ‘காலை வணக்கம்‘ என்ற குறுஞ்செய்தி வந்தது.
வலைவீச்சு
இதுபற்றி அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் டாக்டரை மிரட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.
எனவே இதுபோன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் பீதி அடையாமல் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள் அல்லது குறைந்தபட்சமாக அந்த அழைப்பை துண்டித்துவிட்டு அந்த இடத்தை வெளியேறி விடுங்கள்.





