அறந்தாங்கி அருகே பள்ளி மாணவியை கடத்த முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது.

அறந்தாங்கி அருகே பள்ளி மாணவியை கடத்த முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது.
மாணவியை கடத்த முயற்சி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கஞ்சா போன்ற மாற்றுப் போதையால் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு சில வாரங்களில் இளைஞர்கள் ரகளை, மாடு தேடிச் சென்ற பெண் கொலை, இரட்டை கொலை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களை பட்டியலிட்டு சொல்லும் அளவிற்கு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் அறந்தாங்கி அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 6-ந் தேதி காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பள்ளியின் அருகே முகத்தை மறைத்து கொண்டு நின்ற சிலர் மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களிடம் இருந்து மாணவி தப்பித்து பள்ளிக்கு ஓடி சென்று இதுகுறித்து ஆசிரியர்களிடம் கூறியுள்ள–ார்.
மேலும் அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், பள்ளி மாணவர்களின் பெற்றோர், கிராமமக்கள் பள்ளியின் முன்பு குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மேலும் சந்தேகத்தின் பேரில் திருநாளூர் தெற்கு கருவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் சிவா (வயது 28), அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், பேராவூரணி தாலுகா ஊமத்தநாடு ஆலடிக்காடு பெரியய்யா மகன் மாரிமுத்து (35) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிள், கேபிள் ஒயர்களை திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
தொடர்ந்து மாணவியை கடத்த முயன்றவர்களை கைது செய்யும் வரை மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் மாணவியை கடத்த முயன்றவர்களின் செல்போன் சிக்னல் சிட்டங்காடு பகுதியோடு அணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் மாணவியை கடத்த முயன்றது திருநாளூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த பாண்டி (19), அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்து. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய திருநாளூர் கொப்பியான் குடியிருப்பை சேர்ந்த முருகானந்தம் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.





