மோசடி வழக்கில் சிக்கியுள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தின் அசையும் சொத்துகளை ஏலம் விடவேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு.

மோசடி வழக்கில் சிக்கியுள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தின் அசையும் சொத்துகளை ஏலம் விடவேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு.
மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி மாநிலம் முழுவதும் பலரிடம் பணத்தை பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.
இதுகுறித்து திருச்சி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்து வருகிறார். நேற்று இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் தரப்பில், ‘‘நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஏற்கனவே 24 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்தநிலையில், மேலும் 32 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.
இந்த புகார்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வருகிறோம். இந்த ஐகோர்ட்டு கடந்த முறை புகார் அளிக்க கடைசி நாள் என்று அறிவித்த பின்னரும், தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
நியோ மேக்ஸ் நிறுவனம் தரப்பில், ”எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான தங்கம், வெள்ளி நகைகள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஏலம் விடுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறப்பட்டது.
இதை பதிவுச்செய்து கொண்ட நீதிபதி, ”கார்கள் உள்ளிட்ட அசையும் சொத்துகளை பொது ஏலம் விடுவது தொடர்பாக வருகிற 17-ந்தேதிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும். அதன்படி 31-ந்தேதி ஏலத்தை நடத்தவேண்டும்.
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏலம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடவேண்டும்.
அதன்படி ஏலம் கோரும் தொகை குறித்த விவரங்களை ஐகோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். தங்கம், வெள்ளி ஏலம் விடும் தேதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
விசாரணையை வருகிற நவம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.





