நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியர்: கோபாலப்பட்டினம் மக்கள் மாபெரும் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியர்: கோபாலப்பட்டினம் மக்கள் மாபெரும் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!
கோபாலப்பட்டினம் கிராமத்தின் நீண்டகால கோரிக்கையான குப்பை கொட்டும் இட ஒதுக்கீடு விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை அமல்படுத்தத் தவறிய மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து வரும் பிப்ரவரி 28 (சனிக்கிழமை) அன்று மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
நடந்தது என்ன?
கோபாலப்பட்டினம் கிராமத்திற்கு குப்பைகளைக் கொட்ட தனியாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட ஆட்சியர் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மீறப்பட்ட வாக்குறுதி:
இதனை கண்டித்து கடந்த 14.02.2026 அன்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நேரில் வந்த ஆவுடையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், “ஒரே வாரத்திற்குள் குப்பை கொட்டும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்” என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.


இருப்பினும், அதிகாரிகள் கொடுத்த காலக்கெடு முடிந்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதோடு, கோபாலப்பட்டினம் மக்களை வஞ்சிக்கும் செயலில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
முற்றுகைப் போராட்டம்:
அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, வரும் 28.02.26 (சனிக்கிழமை) அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என கோபாலப்பட்டினம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.





