கட்டுமாவடி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதல்: டிரைவர் படுகாயம்; பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கட்டுமாவடி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதல்: டிரைவர் படுகாயம்; பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பஸ் மீது லாரி மோதல்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே மீமிசலில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று 35 பயணிகளுடன் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது.

கட்டுமாவடி அருகே தோப்புவயல் பகுதியில் வந்த போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் சிறு காயமடைந்த பயணிகளை பேருந்தில் இருந்து பத்திரமாக கீழே இறக்கி விட்டனர்.
மேலும் படுகாயமடைந்த லாரி டிரைவர் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோரிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து நடந்த இடத்தின் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் இந்த இடத்தில் மதுப்பிரியர்கள் மது குடித்து விட்டும், பாட்டில்களை வாங்கிவிட்டும் மோட்டார் சைக்கிள்களில் தாறுமாறாக வருகின்றனர்.
இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே கட்டுமாவடி அருகே கட்டுமாவடி-தோப்புவயல் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்





