பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கான மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் “அன்பு கரங்கள்” திட்டம்.

பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கான மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் “அன்பு கரங்கள்” திட்டம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அருணா தகவல்.
“அன்பு கரங்கள்” திட்டம்
மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியை தொடர, 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, 2 பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
ஆதரவற்ற குழந்தைகள்
இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருந்தால் மற்றும் பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால் விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள்
கீழ்க்காணும் ஆவணங்களுடன், “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் அல்லது மாவட்ட கலெக்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டையின் நகல், குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்), குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





