முத்துக்குடா சுற்றுலா தலத்தில் படகு குழாம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை, மார்ச்.7-
முத்துக்குடா சுற்றுலா தலத்தில் படகு குழாம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடற்கரை பகுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் சுற்றுலா தலம் குறிப்பிடும் படி எதுவும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் மீமிசல் அருகே கடற்கரை பகுதியான முத்துக்குடா சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முத்துக்குடாவில் கடல் பகுதியில் குறிப்பிட்ட தூரம் வரை அலையாத்தி காடுகள் காணப்படுகிறது.
இதனை பொதுமக்கள் படகில் சென்று சுற்றி பார்க்கும் வகையிலும், கரைப்பகுதியில் பொதுமக்களுக்கு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தலமாகவும் ரூ.3 கோடியில் பணிகள் நடைபெறுகிறது.
இதில் கரைப்பகுதியில் பொதுமக்கள், பார்வையாளர்கள் தங்கும் அறை, பார்வையாளர்கள் கூடம், உணவு விடுதி உள்ளிட்டவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற உள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்படுகிறது.
படகு குழாம்
இதேபோல படகு குழாம் அமைப்பதற்காக பணிகள் தற்போது மும்முரமாக நடைபெறுகிறது. கடல் தண்ணீரில் படகுகள் நிறுத்தி வைக்கப்படும் இடம் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்று படகில் ஏறும் வகையில் படகு குழாம் அமைக்கப்படுகிறது.
இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு, அதன்மேல் இரும்பு கம்பிகள் மூலம் தளம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் படகில் ஏறி சவாரி சென்று அலையாத்தி காடுகளின் அழகை சுற்றிப்பார்த்து ரசிக்கலாம்.
முத்துக்குடா சுற்றுலா தலம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.




