புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை, மார்ச்.6-
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 10-ந் தேதி உள்ளூர் விடுமுறை
மாசி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கோவிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு மாசித்திருவிழாவில் காப்பு கட்டுதல், சாமி புறப்பாடு, தேரோட்டம் நடைபெறாது எனவும், மற்றப்படி விழாவானது வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பூச்சொரிதல் விழா வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது. தொடர்ந்து மண்டகபடிதாரர்களின் சார்பில் அம்மனுக்கு நடைபெறும் பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. வருகிற 10-ந் தேதி பிரதான திருவிழா நடைபெற உள்ளது.
அன்றைய தினம் பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
உள்ளூர் விடுமுறை
இந்த நிலையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வருகிற 10-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக வருகிற 15-ந் தேதி சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறை 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும்.
மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.