புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை கிராம மக்கள் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற சிறப்பு முகாம்: அதிகாரிகள் தகவல்.

மீனவ கிராமங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் மீனவர்கள் பலர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் மணமேல்குடி, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளான ஆர்.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், முத்துகுடா போன்ற மீனவ கிராமங்களில் பலர் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விபத்து காலங்களில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நிவாரண தொகை கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சிறப்பு முகாம்
இதற்கிடையில் வாகன சோதனையின் போதும் போலீசார் மீனவ கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மீனவ கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற சிறப்பு முகாம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சிறப்பு முகாம் நடத்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில் 18 வயது நிரம்பியவர்கள் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற பதிவுகள் பெறப்பட்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




