பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஹோட்டல்களுக்கு ரூ.1 லட்சம் விருது: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Tamil Nadu Food Safety Award for Plastic Free Hotels GPM Thalaimurai Media
பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஹோட்டல்களுக்கு ரூ.1 லட்சம் விருது: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாத ஹோட்டல்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விருது மற்றும் பரிசுத் தொகை:
உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ரூ.1 லட்சம் பரிசுடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
- விண்ணப்பிக்கும் ஹோட்டல்கள் உணவு பாதுகாப்புத் துறையின் முறையான பதிவு மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- ஒவ்வொரு உணவகத்திலும் குறைந்தது ஒரு பணியாளராவது உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
- அனைத்து பணியாளர்களும் கடந்த 12 மாதங்களுக்குள் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள வணிகர்கள் இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை PDF வடிவில் dofssapdknew@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது பென்டிரைவ் மூலம் அலுவலகத்தில் நேரடியாக வழங்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை மார்ச் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழுவினர் கள ஆய்வு செய்த பிறகு, தகுதியான உணவகங்கள் சென்னை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, சாந்தநாதபுரம், 6-வது வீதி, புதுக்கோட்டை.





