கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் விசைப்படகில் மடிவலை பயன்படுத்துவதால் கடல்வளம் அழியும் அபாயம்; உடனடியாக தீர்வு காண நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தல்.

மிச்சர் மடிவலை:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன.
இதே பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள விசைப்படகுகள் கரைப்பகுதியில் மிச்சர் மடிவலையை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால் கடலில் உள்ள மீன்கள், இறால், கணவாய் குஞ்சுகள் டன் கணக்கில் பிடித்து வரப்படுகிறது.
இதனால் கடலில் மீன்கள், நண்டுகளின் வளம் அழிந்து வருகிறது. மீன்வளத்தை பெருக்க இந்த பகுதியில் பவளப்பாறை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் அதற்கு நேர்மறையாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த மிச்சர் வலையினால் கடல் வளம் பாதிப்படைகிறது. அதேபோல் நாட்டுப்படகு மீனவர்களும் பாதிப்படைகின்றனர்.
கரைப்பகுதியில்…
விசைப்படகுகள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் தான் மீன் பிடிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதியை மீறி கரைப்பகுதியில் இந்த வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் நாட்டுப் படகு மீனவர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். இது குறித்து நாட்டுப்படகு மீனவர்கள் பலமுறை மீன்வளத்துறையினருக்கு புகார் அளித்தும் எவ்வித மான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.
ஆகையால் இந்த விஷயத்தில் அரசு உடனே தலையிட்டு கடல் வளத்தை பாதுகாக்க மற்றும் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





