புதுக்கோட்டையில் பிறப்பு சான்று பதிவு கால அவகாசம் நீட்டிப்பு – கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டையில் பிறப்பு சான்று பதிவு கால அவகாசம் நீட்டிப்பு – கலெக்டர் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்புச் சான்றிதழ் பெற பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 1969 வழிவகை செய்கிறது.
குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும். பிறப்புச் சான்றிதழ், குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம் மற்றும் வயது குறித்த முடிவான ஆதாரமாகவும் விளங்குகிறது.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அந்த குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்த வித கட்டணமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.
12 மாதங்களுக்குப்பின் 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம்.
15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரினைப் பதிவு செய்திட இயலாது. தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவு விதிகள் 2025-ன்படி 2009-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்று பதிவில் கால அவகாசம் செப்டம்பர் மாதம் 26-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் இதில் தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.





