மணமேல்குடியில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் நேற்று மணமேல்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
110 கிலோ கஞ்சா பறிமுதல்
அப்போது மணமேல்குடி அருகே அந்தோணியார் புரத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து இலங்கைக்கு 3 சாக்கு மூட்டைகளில் கஞ்சாவை கடத்த முயன்றதை கண்டறிந்தனர்.
இதையடுத்து கஞ்சாவை கடத்த முயன்ற மணமேல்குடி அந்தோணியார்புரம் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய ராகுல் (வயது 35), தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி தாலுகா காரங்குடா கிராமத்தை சேர்ந்த சிவசங்கர் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 55 பொட்டலங்கள் கொண்ட 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடியில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





