மீமிசல் அருகே 3-ம் வகுப்பு மாணவனை அடித்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு; தட்டிக்கேட்க சென்ற சிறுவனின் தாயை தாக்கிய 2 பேர் கைது.

மீமிசல் அருகே 3-ம் வகுப்பு மாணவனை அடித்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு; தட்டிக்கேட்க சென்ற சிறுவனின் தாயை தாக்கிய 2 பேர் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கீழ ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் துப்புரவு பணியாளர் இவரது மகன் (வயது 9). அச்சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுவன் , தன்னை அறியாமல் வகுப்பறையிலேயே இயற்கை உபாதை கழித்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் அந்த சிறுவனை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
மாலை வீட்டிற்கு திரும்பியதும், பள்ளியில் நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.
அப்போது மாணவனின் உடலில் பிரம்பால் அடித்த காயங்கள் இருந்ததை கண்டு அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சிறுவனின் தாயார் நேற்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டார்.
அப்போது அவரை சாதியின் பெயரை கூறி தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக சிலர் மாணவனின் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தள்ளி தாக்கினர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானது. இதற்கிடையில் காயமடைந்த சிறுவன் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக மீமிசல் காவல் நிலையத்தில் மாணவனின் தாயார் புகார் அளித்தார்.
அதன்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியர் மீதும், தாயிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த நான்கு நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் , அவரது மகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மற்றவர்கள் தலைமறைவானதால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதில் தலைமை ஆசிரியர் மாணவனை அடித்தது உறுதியானது.
இதையடுத்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
மாணவனை தலைமை ஆசிரியர் அடித்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





