மின்சாரம் பாய்ந்து மணமேல்குடி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி.

மின்சாரம் பாய்ந்து மணமேல்குடி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் சக்திமுருகன். இவர் தா.பழூரில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி பிரியா (வயது 33). இவர் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதிக்கு 4 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

லட்சுமி பிரியா, பல்வேறு போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தான் பணி மாறுதலில் மணமேல்குடி போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.
இதற்காக அவர், மணமேல்குடி வடக்கூரில் வாடகை வீடு எடுத்து குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தார்.
போலீஸ் நிலையத்துக்கு வராததால் சந்தேகம்
தற்போது, பள்ளி காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளை அவரது தாய் வீட்டிற்கு லட்சுமிபிரியா அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 8 மணி ஆகியும் லட்சுமிபிரியா போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை. மேலும் செல்போனில் தொடர்பு கொண்டாலும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக போலீசார் லட்சுமிபிரியா வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது லட்சுமிபிரியா அங்கு இறந்த நிலையில் கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் லட்சுமிபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் பாய்ந்தது
பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், போலீஸ் நிலையத்திற்கு செல்லவதற்காக லட்சுமிபிரியா நேற்று காலையில் தயார் ஆகி கொண்டிருந்தார். இதற்காக சீருடையை அயன்பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார்.
அப்போது அயன்பாக்சில் இருந்து மின்சாரம் லட்சுமிபிரியா மீது பாய்ந்ததில் அவர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





