தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் சேர சிறப்பு முகாம்

புதுக்கோட்டை, பிப்.27-
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் சேர சிறப்பு முகாம்
விபத்து காப்பீடு
இந்திய தபால் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் இணைந்து பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக விபத்து காப்பீடு திட்டத்தில் சேர கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
நாள்தோறும் வேலை செய்யும் இடங்களில், வீடுகளில், பயணங்களின் போது என பல்வேறு எதிர்பாராத விபத்துகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
இதனால் வருவாய் இழப்பு, கடன், மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றன.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு தபால் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகிறது.
ஆவணங்கள்
இத்திட்டத்தில், 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் எண், செல்போன் எண், வாரிசுதாரரின் விவரங்கள் தேவை.
திட்டத்தின் கட்டண விவரம் ரூ.320-க்கு ரூ.5 லட்சம், ரூ.559-க்கு ரூ.10 லட்சம், ரூ.799-க்கு ரூ.15 லட்சம் என்ற வகைகளில் இந்த திட்டத்தில் இணையலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தலைமை தபால் அலுவலகம், அனைத்து தபால் அலுவலகங்களையும் மற்றும் புதுக்கோட்டை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கிளையையும் தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை தபால் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
