தங்கம் விலை வரலாற்றில் உச்சத்தை எட்டியது: ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்தை தொட்டது.

சென்னை, மார்ச்.29-

தங்கம், அனைவரது விருப்பத்துக்குரிய ஒன்றாகும் கடந்த மாதத்தில் மட்டும் 3,480 ரூபாய் உயர்வு, தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்தை தொட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

ஆனால், அதை யாரும் வாங்க முடியாத வகையில் எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத்தோன்றும் அளவுக்கு தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், 1980-ம் ஆண்டில் ஒரு பவுன் ரூ.1,000 என்ற நிலையை கடந்தது.

அதன் தொடர்ச்சியாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயேதான் இருந்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டில் ஒரு பவுன் ரூ.6 ஆயிரத்தையும், 2009-ம் ஆண்டில் ரூ.10 ஆயிரத்தையும் தாண்டியது. இப்படியாக விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து காணப்பட்டு, ஒரு பவுன் ரூ.6 ஆயிரம் என்று விற்ற நிலை மாறி, தற்போது ஒரு கிராம் ரூ.6 ஆயிரம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. அதிலும் கொரோனா தொற்றுக்கு பிறகு, அதாவது, 2021-ம் ஆண்டில் இருந்து தங்கம் விலையில் அதிரடி மாற்றத்தை பார்க்க முடிந்தது. 2020-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரம் என்று இருந்தது. அது 2021-ம் ஆண்டில் ரூ.35 ஆயிரமாக அதிகரித்தது. அதன் பின்னர், 2022-ம் ஆண்டில் ரூ.40 ஆயிரம் என்ற அளவுக்கு வந்தது.

ராக்கெட் வேகத்தில் உச்சம்

அந்த நேரத்தில் இவ்வளவு விலைக்கு விற்றால் எப்படி தங்கம் வாங்க முடியும்? என்ற பேச்சும் எழுந்தது. இருப்பினும் விலை குறைந்தபாடில்லை. மீண்டும் ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை பயணித்தது. கடந்த ஆண்டில் (2023) ரூ.45 ஆயிரம் என்ற நிலையையும் அடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக ரஷியா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை ஆகியவை சொல்லப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 815-க்கும், ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. அதனையடுத்து இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ‘கிடுகிடு’வென அதிகரித்தது. கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை கடந்து இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை உச்சத்தில் இருந்தது.

ஒரு பவுன் ரூ.51 ஆயிரம்

இந்த விலை மேலும் அதிகரித்து கொண்டே சென்று, கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்தையும் தாண்டியது. அதன் பின்னர் கடந்த 20 நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் ரூ.50 ஆயிரத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது. தங்கத்தின் விலை, எப்போது வேண்டுமானாலும் 50 ஆயிரம் ரூபாயை எட்டிவிடும் என்றே சொல்லப்பட்டு வந்தது.

அதன்படி, நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 250-க்கும், ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி, தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை பதிவு செய்துவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் பவுனுக்கு ரூ.25 ஆயிரமும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.3 ஆயிரத்து 480-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.55 ஆயிரத்தையும் கடக்கும்…

இதுதொடர்பாக மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமாரிடம் கேட்டபோது, ‘சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது பெரும் முதலீட்டாளர்களின் கவனம் இருந்து வருகிறது. இதனால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருகிறது. வரக்கூடிய நாட்களிலும் விலை அதிகரித்து காணப்படும். இடையில் ஓரளவுக்கு விலை குறையும். ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தையும் கடக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது’ என்றார்.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 80 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.80 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button