வெளிநாடுகளில் வேலைக்கு சென்று இறந்தவரின் குடும்பத்தினர் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அருணா தகவல்.

நிதி உதவி
வெளிநாடுகளில் வேலைக்கு சென்று இறந்தவரில் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசால் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் தமிழர்கள் அதிகளவில் முதல் நிலை தொழிலாளர்களாக செல்கின்றனர்.
குடும்பத்தின் முதன்மையான பொருளீட்டும் நபராக இருக்கும் இவர்கள், எதிர்பாராத விதமாக அயல்நாடுகளில் இறக்கும் போது அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தார் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, குடும்பத்தின் முதன்மை பொருளீட்டும் நபரை இழந்து துன்புறும் வெளிநாடு தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நலவாரியத்தில் பதிவு
வெளிநாடுகளில் உயிரிழக்கும் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினர் இந்நிதி உதவி பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் (அனைத்து வகை இறப்பிற்கும் இத்திட்டம் பொருந்தும்).
உயிரிழந்த நபர் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும் (உறுப்பினர் அட்டை காலாவதியாகாமல் இருக்க வேண்டும்). உயிரிழக்கும் போது வெளிநாட்டில் முறையான ஆவணங்களுடன் பணியில் இருந்திருக்க வேண்டும்.
உயிரிழந்தவரின் கடவுச் சீட்டு (இந்திய தூதரகத்தால் ரத்து செய்யப்பட்டது), வெளிநாட்டின் இறப்பு சான்று மற்றும் இந்திய தூதரகத்தின் இறப்பு சான்று, உயிரிழக்கும் போது வெளிநாட்டில் பணிபுரிந்ததற்கான சான்று, வாரிசு சான்று, வருமான சான்று, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்கள் அவசியமாகும்.
இணையதள முகவரி
வெளிநாட்டில் உறுப்பினர் உயிரிழந்த 9 மாத காலத்திற்குள் குடும்பத்தினர் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் நேரடியாகவோ (அயலகத் தமிழர் நல வாரியம் சேப்பாக்கம் சென்னை 09) அல்லது அயலகத் தமிழர் நலவாரியத்தின் இணையதளம் வாயிலாகவோ https://nrtamils.tn.gov.in இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





