புதுக்கோட்டையில் போலீசார் அதிரடி சோதனை: ஆம்னி பேருந்தில் ரூ.20 லட்சம் ‘ஹவாலா’ பணம் சிக்கியது.

புதுக்கோட்டையில் போலீசார் அதிரடி சோதனை: ஆம்னி பஸ்சில் ரூ.20 லட்சம் ‘ஹவாலா’ பணம் சிக்கியது.
போலீசார் வாகன சோதனை
புதுக்கோட்டையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலை வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி செல்லக்கூடிய ஆம்னி பஸ்சை புதுக்கோட்டை கருவேப்பிலான் ரெயில்வே கேட் அருகே மறித்து சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகப்படும்படியாக ஒருவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அந்த பணம் `ஹவாலா’ என தெரியவந்தது.
ரூ.20 லட்சம் பறிமுதல்
இதையடுத்து அந்த பணம் இருந்த பையை போலீசார் கைப்பற்றி, அதனை கொண்டு வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த நபர் என தெரியவந்தது.
மேலும் அதனை தன்னிடம் ஒருவர் கொடுத்து புதுக்கோட்டையில் ஒருவரிடம் கொடுக்குமாறு கூறியதாகவும், அதற்கு ரூ.3 ஆயிரம் பணம் தருவதாக கூறி தந்து அனுப்பியதாக கூறியிருக்கிறார்.
மேலும் அந்த பணத்தை புதுக்கோட்டை புதிய பஸ்நிலையத்துக்கு வந்து ஒருவர் வாங்கி கொள்வார் என கூறியதாகவும் தெரிவித்தார்.
அந்த பையில் மொத்தம் ரூ.20 லட்சத்து 81 ஆயிரத்து 150 இருந்தது.
இதனை பறிமுதல் செய்து அந்த நபரை புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தனர்.
வருமான வரித்துறையினரிடம் ஒப்படைப்பு
பின்னர் போலீசார் விசாரணையில், அந்த பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், முன்னுக்கு பின் முரணாக கூறி வந்தார்.
இதையடுத்து திருச்சி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? அதனை யாரிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது? என்பது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





