17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் மாடி பஸ் சேவை; விரைவில் தொடக்கம்.

17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் மாடி பஸ் சேவை; விரைவில் தொடக்கம்.
சென்னையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாடி பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
வெள்ளி விழாவில் அறிமுகம்
1972-ம் ஆண்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உதயமானது. இந்த கழகம் 1997-ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடியபோது அதன் அடையாளமாக மாடி பஸ் என்று அழைக்கப்படும் என்று ‘டபுள் டக்கர்’ பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு-தாம்பரம் இடையே மாடி பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் பயணம் சென்னைவாசிகளுக்கு புது அனுபவத்தை தந்தது.
நாளடைவில் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கியது. 15 அடி உயரம் கொண்ட மாடி பஸ்சால் மேம்பாலங்களுக்கு உள்ளே புகுந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் 2008-ம் ஆண்டு மாடி பஸ் சேவை நிறுத்தப்பட்டது.
சோதனை ஓட்டம்
தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பயணிகள் வசதிக்காக புதுப்புது மாடல் சொகுசு பஸ்களை இயக்கி வருகிறது. ‘டபுள் டக்கர்’ பஸ் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த 2023-ம் ஆண்டு தகவல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் சென்னையில் 20 மின்சார டபுள் டக்கர் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கையை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டுள்ளது. தற்போது சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார பஸ்கள் இயக்கம், பராமரிப்பை மேற்கொண்டு வரும் ‘அசோக் லேலண்ட்’ நிறுவனத்தின் துணை நிறுவனமே ‘டபுள் டக்கர்’ மின்சார பஸ்கள் இயக்கம், பராமரிப்பை மேற்கொள்ள உள்ளது.
சென்னையில் மேம்பாலங்கள் இல்லாத வழித்தடங்களில் குறிப்பாக மெரினா, ஈ.சி.ஆர். போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த பஸ்கள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது. தற்போது இந்த வழித்தடத்தில்தான் இந்த பஸ் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
17 ஆண்டுகள் கழித்து…
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த டபுள் டக்கர் மின்சார பஸ்சில் 90 பயணிகள் அமர்ந்து செல்ல முடியும். மொட்டை மாடியில் நின்று காற்று வாங்கி வேடிக்கை பார்ப்பது போன்று இந்த பஸ்சில் காற்று வாங்கியபடி பயணிக்கலாம். இந்த மாடி பஸ் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
17 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் மீண்டும் மாடி பஸ்கள் வலம் வரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





